தீராத காது வலி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம், சென்னையில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவொற்றியூரைச் சார்ந்தவர் நந்தினி இவருக்கு 16 வயதில் அபிநயா என்ற மகள் இருந்தார். அபிநயா ராயபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். சிறு வயது முதலே அவருக்கு காது வலி இருந்து வந்துள்ளது. ஆனால் சில மாதங்களாக காது வலி பிரச்சனை அதிகமாகி அவரால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை இதனைத் தொடர்ந்து தனது தாயிடம் காது வலி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக சிகிச்சை எடுக்க வேண்டுமென கூறினார். இதனைத் தொடர்ந்து அவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தனர். அப்போது அவரது காதை ஸ்கேன் செய்து பார்த்து மருத்துவர்கள் ஒரு அறுவை சிகிச்சை செய்தால் இந்த பிரச்சனை நிரந்தரமாக குணமடையும் என நம்பிக்கை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அபிநயாவுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன . அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
ஆனால் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாளிலிருந்து மாணவி அபிநயாவுக்கு சீரற்ற இதயத் துடிப்பு பிரச்சனை ஆரம்பமானது. இதனால் வேறொரு மருத்துவமனைக்கு அபிநயாவை அழைத்துச் சென்றனர். அங்கும் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. அந்த மருத்துவர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் மாணவியை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி திடீரென உயிரிழந்தார். இது தொடர்பாக ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தனியார் மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் மருத்துவம் அளித்த மருத்துவர்கள் ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.