சிதம்பரத்தில் காதலியை பார்க்க சென்ற இளைஞரை, வெட்டிக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன்(21). இவர் சிதம்பரம் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இதனிடையே, அரங்கநாதன் நகரைச் சேர்ந்த உறவினர் பாபு என்பவரின் மகளான 10ம் வகுப்பு படிக்கும் பிரியாவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அன்பழகனும் கடந்த ஒரு வருடத்திற்க்கு மேலாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விசயம் சிறுமியின் வீட்டிற்குத் தெரிந்ததை அடுத்து இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் பிரியா வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அன்பழகன் நடவடிக்கை சரியில்லாததால் பிரியா அவரிடம் பேச மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அன்பழகன் அவ்வப்போது ஜனனியைப் பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனைக் பிரியா குடும்பத்தினர் கண்டித்து இங்கெல்லாம் வரக்கூடாது என கூறியும், அதையும் மீறி அன்பழகன் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் கடுமையாகக் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு மீண்டும் பிரியாவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அன்பழகனுக்கும் சிறுமியின் குடும்பத்தாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் அன்பழகன் ஆயுதத்தால் தாக்க வந்ததாகவும் பாபு குடும்பத்தினர் அவரது கையை இரண்டையும் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த ஆயுதங்களால் வெட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அன்பழகன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வீட்டிலே இறந்து போனார். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்மந்தமாக பாபு, சத்தியா, ஜீவா ஆகியோர் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்