குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் இன்று 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் இன்று இரவு 8.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவானதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. வடமேற்கு ராஜ்கோட்டில் இருந்து 118 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டு குஜராத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பூஜ் என்ற இடத்தில் இருந்து 85 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் இன்றைய நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.
குஜராத் நிலநடுக்கம் ஏற்பட்டு அடுத்த 30 நிமிடங்களுக்குள் ஜம்மு காஷ்மீரின் காத்ரா பகுதியில் 2.9 என்ற ரிக்டர் அளவுகோளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில், கடந்த 2 மாதத்தில் மட்டும் இதுவரை 14 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

முன்னதாக கடந்த புதன்கிழமை, அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள திகில்பூர் என்ற இடத்தில் 4.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதேபோல் கடந்தசெவ்வாயன்று, ஸ்ரீநகரில் 3.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.