சென்னை பகுதியில் சாலிகிராமம் காந்திநகரில் உள்ள அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் தில்லைக்கரசி (41) என்பவர். விலை மதிப்புள்ள நாய் ஒன்றை இவர் சில காலங்களாக வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற 4ம் தேதி அந்த நாய் மாயமாகி விட்டது. பெரும் அதிர்ச்சியடைந்த தில்லைக்கரசி அருகில் உள்ள எல்லா இடங்களிலும் தேடியிருக்கிறார்.
இருப்பினும் நாய் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து வீட்டிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பெற்று ஆய்வு செய்த போது, உணவு டெலிவரி செய்யும் ஒருவர் நாயை திருடி சென்றது தெரிய வந்துள்ளது.
மேலும், உணவு டெலிவிரி செய்த அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து அவரை மீண்டும் அழைத்து கையும் களவுமாக தில்லைக்கரசி பிடித்துள்ளார். தொடர்ந்து விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அவரை ஒப்படைத்தார்.
காவல்துறையினரின் விசாரணையில், அந்த நபர் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வரும் சுஜித்(21) என்றும், இவர் சில நாட்களாக பைக்குகளையும் திருடி விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.