ஜார்க்கண்ட் மாநில புதிய ஆளுநராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ், மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல.கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இரண்டு முறை கோவை தொகுதி மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்த தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை ஊடகப்பிரிவு செயலாளர் அஜய் குமார் சிங் தெரிவித்துள்ளார்.