நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
துருக்கி, சிரியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதன் தாக்கமே இன்னும் தணியவில்லை. இந்த நிலையில், நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே நியூசிலாந்தின் ஆக்லாந்து (Auckland), நேப்பியர் (Napier) போன்ற நகரங்களில் கேப்ரியல் புயல், வெள்ளம் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், வெலிங்டனில் 6.1 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் தொடர்பாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் வெலிங்டனுக்கு அருகிலுள்ள லோயர் ஹட்டிலிருந்து வடமேற்கே 78 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த நிலநடுக்கம் 48 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும், இதன் மையம் பராபரமு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நிலநடுக்கத்தால், இதுவரை எந்தவொரு உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.