பலருக்கு கொரோனா பரவ திமுகவின் ஒன்றிணைவோம் வா திட்டம் காரணமாகிவிட்டதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

தரங்கெட்ட அரசியலை நிறுத்து, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி உன்னை நீயே தனிமைப்படுத்து என திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த நீண்ட அறிக்கையில், இந்தியாவிலேயே நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், அதற்கான கொரோனா பரிசோதனை கூடங்களை இந்தியாவிலேயே அதிகளவில் அமைத்ததிலும் என நாட்டுக்கே வழிகாட்டும், திறமைமிக்க மாநிலமாக தமிழகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒட்டுமொத்தமாக மக்களுக்காக அரும்பாடுபடும் அரசு ஊழியர்களையெல்லாம் மனச்சோர்வு அடையச் செய்யும் வகையிலும், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்திலும் எதிர்க்கட்சியான தி.மு.க. அதர்மத்தின் வழியில் அரசியல் செய்து அக்கிரமம் புரிந்து வருகிறது.
கொரோனா பரவலின் தொடக்கத்திலேயே சட்டமன்றத்தை நடத்தக்கூடாது, கொரோனா பரவி விடும் என்று பேரவையை புறக்கணித்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அன்றைய தினமே வடசென்னையில் 2000 பேரோடு போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார்.
அதுமட்டுமின்றி, கொரோனா பரவலின்போது டெல்லி மாநாடு செல்பவர்களுக்கு அறிவுரை சொல்லி, தொற்றிலிருந்து காப்பாற்றாமல் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்.பி. உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து உதவி செய்வது போல் நடித்து தொற்று பரவ காரணமாக இருந்தும், அதன் தொடர்ச்சியாக கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா தொற்று பரவிடச் செய்ததிலும், சிறுபான்மையின இஸ்லாமிய மக்கள் மீது அவசியமற்ற கொரோனா பரவல் பழியை போடும் வகையில் இஸ்லாமிய மக்களை கொரோனா நோய் தொற்று காலத்திலும் திட்டமிட்டு போராட தூண்டியதும் ஸ்டாலின் தான் என குற்றம்சாட்டி உள்ளார்.

உலகமே வலியுறுத்தும் சமூக விலகலை மக்களிடையே வலியுறுத்துவதற்கு மாறாகவும், “வீட்டில் இரு, விலகி இரு, விழிப்பாய் இரு” என்கிற தமிழ்நாடு முதலமைச்சரின் அழைப்புக்கு நேர் எதிராகவும் “ஒன்றிணைவோம் வா” என்று, ஒவ்வாத வசனத்தைப் பேசியதோடு, மக்களுக்கு நிவாரணம் வழங்குகிற தன்னார்வலர்களும், தனவந்தர்களும், அரசின் மூலம் வழங்கலாம் அதன் மூலம் சமூக இடைவெளி குறையாத நிலையை பாதுகாப்போடு மேற்கொள்ளலாம் என தமிழக அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கியதோடு, கண்டெய்ன்மெண்ட் ஜோன், ஹாட்ஸ்பாட் என நோய் பரவல் அதிகமுள்ள பகுதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையம் அமைத்த பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்குகிறோம் என்ற பெயரிலே மக்களிடையே கொரோனாவை பரப்பி இன்றைக்கு ஒட்டுமொத்த சென்னை மக்களின் நிம்மதியை கெடுத்ததும், சென்னையிலிருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் செல்வோரால் பல மாவட்டங்களில் மீண்டும் நோய்த்தொற்று பரவும் அபாயத்திற்கும் காரணமே கொரோனாவை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் ஸ்டாலினின் அதிகார வெறி தான் என தெரிவித்துள்ளார்.