சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் 73 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது. இதன்படி, இந்திய ரயில்வே கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்துதல் / நவீனப்படுத்துதல் பணிகள் நடைபெறுகின்றன.
இதன்படி தமிழ்நாட்டில் 73 ரயில் நிலையங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தை எளிதாக அணுகுதல், தங்குமிட வசதிகள், கழிவறைகள், மின்தூக்கி வசதிகள், சுகாதாரம், இலவச வைஃபை ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருட்கள் விற்பனை நிலையம், பயணிகள் தகவல் மையம், வணிகம் சார்ந்த கூட்ட அரங்குகள் ஆகிய வசதிகளை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்கள் பெறும்.