தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை திறக்க அரசு திட்டட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரானா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு தழுவிய அளவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தற்போது நான்காம் கட்டமாக நீடித்து வருகிறது . இதற்கிடையே, கொரானா நோய்த்தொற்று காரணமாக மாணவா்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டு, ஒன்பதாம் வகுப்பு வரை அனைவரும் தோ்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பள்ளிக் கல்வித் துறையின் வழக்கமான கால அட்டவணையின்படி , கோடைக் கால விடுமுறைக்கு பிறகு, பள்ளிகளை ஜூன் 1-ஆம் தேதி திறக்க வேண்டும். ஆனால், கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் தற்போதுள்ள சூழலில், பள்ளிகள் திறக்கப்படும் நாள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து சென்னை தலைமைசெயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், பள்ளிகளில் கொரானா முன்னெச்சரிக்கையாக சமூக இடைவெளியை கடைபிடிக்க சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும், காலை, மதியம் என இரண்டு வேளைகளில் வகுப்புகளை பிரித்து நடத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்கலாம் என்றும், 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2ம் வாரத்தில் பள்ளிகளை தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது