இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மாவின் பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

விளையாட்டுத்துறையில் ஜொலிக்கும் இந்திய நட்சத்திரங்களுக்கு ஆண்டு தோறும் மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ உள்ளிட்ட விருது வழங்கப்படும். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் விளையாட்டில் உயரிய விருதான ‘கேல் ரத்னா’ விருதுக்கு துவக்க வீரர் ரோகித் சர்மா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப காலத்தில் நடுக்கள வீரராக ஆடி வந்த ரோகித் சர்மா, தொடக்க ஆட்டக்காரராக மாற்றப்பட்டது முதல் ரன் குவிப்பில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை இரட்டை சதங்களை அடித்ததுடன், கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் கோலிக்கு அடுத்த படியாக இந்திய அணிக்காக அதிக பட்ச ரன்களையும் குவித்து வருகிறார்.

மேலும், இவர், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் 5 சதம் உட்பட அதிகபட்சமாக 648 ரன்கள் குவித்தார். மற்றொரு இந்திய துவக்க வீரர் ஷிகர் தவான், மூத்த வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா, இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோர் ‘அர்ஜுனா’ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.