15 வயது சிறுமியை 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியில் உள்ள ராம்கோட் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர், இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றுள்ளார். அப்போது, சிறுமி வீட்டில் இருந்து தனியாக வெளியே வந்ததை அப்பகுதியில் வசிக்கும் 5 இளைஞர்கள் கவனித்து அவரை பின் தொடர்ந்தனர். யாரும் அங்கு இல்லாததை அறிந்த இளைஞர்கள், சிறுமியை பலவந்தமாக வயல் பகுதிக்கு தூக்கிச் சென்றனர். அங்கு இந்த 5 பேரும் சிறுமியை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிப்புக்கு ஆளான சிறுமி அங்கிருந்து தப்பியோடி ஊருக்குள் வந்து தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார். அதற்குள்ளாக சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிவிட்டனர். தொடர்ந்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரில் 3 பேர் சிறார்கள். புகாரை தொடர்ந்து போலீசார் அங்கு நடத்திய அதிரடி சோதனையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இவர்கள் 5 பேரும் மாற்று சமூதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் சமூக பதற்றம் நிலவி வருகிறது. ஊரில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், கிராமத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக அப்பகுதி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.