கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் உள்ள சிர்காவ் என்ற இடத்தில் ஸ்ரீ லைராய் தேவி கோயிலின் திருவிழா நேற்றிரவு நடந்தது. இத்திருவிழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக தீ மிதி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிலர் தீயில் அமர்ந்து பிரார்த்தனை செய்வார்கள். இதை நேரில் காண மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர்.
மேலும், அங்கு பாதுகாப்புப் பணிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிலைமை இருந்தது. பக்தர்கள் அனைவரும் தீமிதி திருவிழா நடக்கும் இடத்தில் கூடியிருந்தனர். அப்போது, கட்டுக்கடங்காத கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பக்தர்கள் அனைவரும் முண்டியத்துக்கொண்டு ஓடியதால், இதில் பல பக்தர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிற மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர், பாதுகாப்புப் பணியில் இருந்த போதிலும், கூட்டத்தை சரியாக நிர்வகிக்க முடியவில்லை. இதற்கிடையே, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், முதல்வர் பிரமோத் சாவந்த், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.