அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
சென்னை வானகரத்தில் கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதேநேரத்தில், அதிமுக கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து முக்கியமான கோப்புகளை எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் இடையே மோதல் வெடித்ததோடு, தலைமை அலுவலகம் சீல் வைக்கும் நிலைக்கு உள்ளாக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”வருகிற 15ஆம் தேதி சென்னை வானகரத்தில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அமமுக கட்சியின் துணைத் தலைவருமான அன்பழகன் தலைமையில், காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்பதால், அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதிமுக கூட்டம் நடைபெற்ற அதே மண்டபத்தில் அமமுக பொதுக்குழு கூட்டமும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.