நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து BMW X5 காரை ரூ.63 லட்சத்திற்கு இறக்குமதி செய்திருந்தார்.. இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த தமிழக அரசு வணிக வரித்துறை உத்தரவிட்டது.. இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கில் நுழைவு வரி வசூலிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது.. இதையடுத்து ரூ.7,98,075 நுழைவு வரி விஜய் தரப்பில் செலுத்தப்பட்டது.. ஆனால் வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான ரூ.30,23,609 அபராதம் செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வணிக வரித்துறை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விஜய்… இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கார் இறக்குமதி செய்யப்பட்டதில் இருந்து மாதத்திற்கு 2 சதவீதம் என கணக்கிட்டு மட்டுமே அபராதம் விதிக்கப்பட வேண்டுமெனவும், ஆனால் தனக்கு 400 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வணிக வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது..
அப்போது இறக்குமதி காருக்கு 2019-க்கு முன் முழு நுழைவு வரியை செலுத்தி இருந்தால் அபராதம் விதிக்கக்கூடாது என்று நீதிபதி தெரிவித்தார்.. மேலும் 2019-ம் ஆண்டுக்கு பின்னும் நுழைவு வரி செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கலாம் என்ற வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.. மேலும் நுழைவு வரி செலுத்தவில்லை என அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த இந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.. இதே போல் நுழைவு வரியை ரத்து செய்யக்கோரிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளையும் முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்..