2022ம் ஆண்டின் உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது. அதாவது இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றின் தரம் 10 மடங்கு அதிகமாக உள்ளது.
2022ம் ஆண்டில் சர்வதேச அளவில் காற்றின் தரம் குறித்து சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐகியூஆர் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 30,000 சோதனை கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகில் மிகவும் மாசடைந்த நாடுகள் பட்டியலில் சாத் நாடு முதலிடத்தில் உள்ளது. ஈராக் இரண்டாவது இடத்திலும் , 3வது இடத்தில் பாகிஸ்தானும் நான்காவது இடத்தில் பஹ்ரைனும் உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு 5-வது இடத்தில் இருந்த இந்தியா 2022ம் ஆண்டில் எட்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், உலக சுகாதார நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவை விட இந்தியாவில் காற்றின் தரம் 10 மடங்கு அதிகமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிகவும் மாசடைந்த நகரங்கள் பட்டியலில் பாகிஸ்தானை சேர்ந்த லாகூர் முதலிடத்திலும் சீனாவைச் சேர்ந்த ஹோட்டன் நகரம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தானி உள்ள பிஹிவாடி மற்றும் டெல்லி நகரங்கள் மூன்றாவது இடத்திலும் நான்காவது இடத்திலும் உள்ளது. டெல்லியில் உள்ள மாசு அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 மடங்கு அதிகமாக உள்ளது. இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களான கொல்கத்தா 99 வது இடத்திலும் மும்பை 137வது இடத்திலும் ஹைதராபாத் 199வது இடத்திலும் பெங்களூரு 440வது இடத்திலும் சென்னை 682வது இடத்திலும் உள்ளது.