அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் இதை விசாரித்து, தமிழக அரசு மற்றும் காவல் துறைக்கு சராமரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், காவல் துறையின் தவறால் எஃப்ஐஆர் வெளியாகி, பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் குடும்பத்தினருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, அவருக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளிடம் இருந்து இந்த தொகையை வசூலித்துக் கொள்ளலாம்.
மேலும் கல்வி கட்டணம் உள்ளிட்ட எந்த கட்டணமும் வசூலிக்காமல் மாணவி படிப்பை முடிக்க பல்கலைக்கழகம் அனுமதிக்க வேண்டும். பல்கலைக்கழக வளாகத்தில் பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை. எனவே, பாதுகாப்பை மேம்படுத்த பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.