Pahalgam terrorists: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பயணிக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, சென்னையில் இருந்து இலங்கை சென்ற விமானத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில், நம் அண்டை நாடான பாக்., ஆதரவு பயங்கரவாதிகள் சமீபத்தில் நடத்திய தாக்குதலில், 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்க, நம் நாடு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில், தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து கொழும்பின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை 11:59 மணியளவில் வந்து சேர்ந்ததாகவும், வந்தவுடன் விரிவான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த விமானத்தில் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இருப்பதாக, கொழும்பு விமான நிலைய அதிகாரிகளுக்கு நம் உளவுத் துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர். இதன்படி விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் இலங்கை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். எனினும் சந்தேகத்துக்குரிய நபர்கள் யாரும் இல்லை.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘விமானத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாக சென்னையிலிருந்து தகவல் வந்தது. விமானத்தில் வந்த பயணியர் அனைவரையும் முழுமையாக சோதனை நடத்தியதில், எந்த விதமான ஆயுதங்களும் இல்லை. மேலும் இதுதொடர்பாக சென்னை விமான நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்’.