தமிழகம் முழுவதும் அடுத்த இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (நவம்பர் 11) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களுக்கு சனிக்கிழமை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் அதி கனமழை வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் நாளை (நவம்பர் 11) இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாளை கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை தொடர்ந்து சென்னை, வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ளதாக ஆட்சியர்கள் அறிவித்தனர்.