நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் – 3 விண்கலத்தின் உயரம் மேலும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், நிலவை சந்திரயான் 3 நெருங்கி வருவதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
சமீபத்தில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 3 (Chandrayaan-3) விண்கலம், நிலவுக்கு அருகே 100 கிமீ அணுக்கப் பாதைக்குள் செலுத்தும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர். சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பிறகு அடுத்த 7 நாட்களில் நிலவில் லேண்டர் கலன் தரையிறக்கப்படும். சந்திரயான் – 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக நிலவின் சுற்றுப்பாதைக்குள் பயணித்து வருகிறது.
தற்போது சந்திரயான் – 3 விண்கலம், குறைந்தபட்சம் 150 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 177 கி.மீ. தொலைவும் கொண்ட நிலவின் நெருக்கமான பாதையில் பயணித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக நிலவின் தரைப்பகுதிக்கும், விண்கலத்துக்குமான தூரத்தை 100 கி.மீ. ஆக குறைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. நிலவுக்கும், சந்திரயான் – 3க்கும் இடையேயான தூரம் நான்கவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து லேண்டர் சாதனம் விடுவிக்கப்பட்டு, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.