சென்னை புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரேம்குமார் (37). இவரது மனைவி கோமதி (35). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. குடிக்கு அடிமையான பிரேம் குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிரேம்குமார், வழக்கம்போல் மனைவியுடன் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து, மனைவி புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் பிரேம்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதனால், ஆத்திரமடைந்த பிரேம் குமார் வீட்டிற்குச் சென்றதுமே மனைவியிடம் மீண்டும் சண்டை போட்டு அடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் சுவற்றில் தலை மோதியதில் மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிரேம்குமார் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளார். பின்னர், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோமதியின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து நேற்று அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.