கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்புக்களால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த இருமல் மருந்தை பயன்படுத்த உலக சுகாதார நிறுவனம் தடை விதித்தது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கண் சொட்டு மருந்தில் கிருமிகள் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 8 பேருக்கு கண்பார்வை பறி போனதாகவும், 12 பேருக்கு கண் நோய் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உயர்மட்ட மருத்துவ கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கண் சொட்டு மருந்துகளுடன் தொடர்புடைய அதிக மருந்து எதிர்ப்பு பாக்டீரியா ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடும் என தெரிவித்துள்ளது. இந்த கிருமி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட EzriCare செயற்கை கண் சொட்டு மருந்துகளில் காணப்பட்டது. குலோபர் பார்மா ஹெல்த் கேர் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்து மீது தான் இந்த புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான தண்ணீரால் இந்த சொட்டு மருந்து தயாரிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் குளோபல் பார்மா ஹெல்த்கேர், பிப்ரவரியில் அமெரிக்க சந்தைக்கான கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்தியது. இதனால் இந்த சொட்டு மருந்தினை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தற்போது அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்திய கண் சொட்டுகளுடன் இணைக்கப்பட்ட அதிக மருந்து எதிர்ப்பு பாக்டீரியா அமெரிக்காவுக்கு பரவக்கூடும் என்று CDC எச்சரிக்கை விடுத்துள்ளது. அசுத்தமான செயற்கைக் கண்ணீரைப் பயன்படுத்துவதால் கண் நோய்த்தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கிறது. இதனால் கண் பார்வை பறிபோய்விடும். அல்லது உயிரிழப்பும் ஏற்படலாம். மேலும் ரத்தம், நுரையீரல் அல்லது காயங்களில் தொற்றுநோயை ஏற்படுத்திவிடக்கூடும்.
ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் சிகிச்சையளிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனால் “EzriCare அல்லது Delsam Pharmaன் கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியவர்கள், கண் நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.