புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அருகே உள்ள வானக்கன் காடு கிராமத்தில் டாஸ்மாக் கடையில் அனுமதி இன்றி பார் இயங்குவதாகவும் அதில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் வந்த புகார்களின் அடிப்படையில், தனி படை காவல்துறையினர் முத்துக்குமார், மகேஸ்வரன் உள்ளிட்டோர் இரு நாட்களுக்கு முன்னர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கு திமுகவின் வடக்கு மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி தலைவரான மதியழகன்(55) என்பவர் வந்தார் அப்போது அனுமதியின்றி நடத்தி வந்த பாரின் மதுபான விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த பரிமளம் (49) என்பவரை காவல்துறையினர் பிடித்து தங்களுடைய வாகனத்தில் ஏற்றினர்.
இதைத்தண்ட மதியழகன், காவலர்களை தகாத வார்த்தைகளில் திட்டியதுடன் வாகனத்தில் இருந்த பரிமளத்தை கீழே இறக்கிவிட்டுள்ளார். அதோடு இதை கண்டித்த காவலர்கள் இருவரையும் அவர் தாக்க முயற்சி செய்திருக்கிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில், மதியழகன், பரிமளம் உள்ளிட்டோர் மீது தகாத வார்த்தைகளால் திட்டியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, தாக்குதல் நடத்தியது, அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடகாடு காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.