முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கு ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”38 மாவட்டங்களைச் சேர்ந்த 386 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட வேண்டும் என்றும் விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய மாவட்ட அளவில் சி.இ.ஓ. தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 38 மாவட்ட குழுக்கள் தரும் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையிலான மாநில அளவிலான குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆசிரியராக எவ்வித புகாருக்கும் இடம் தராமல் பணிபுரிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே விருது பெற்றவர்களை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசியல் தொடர்புள்ள ஆசிரியர்களை விருதுக்கு பரிந்துரை செய்யக் கூடாது என்று புதிய நடைமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.