மத்திய நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன், பெங்களூரு ஜெயநகரில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரகலா வாங்மயிக்கு, ப்ரதீக் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் தனியார் ஹோட்டலில் நேற்று எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமண வைபவத்திற்கு நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம்.
வழக்கமாக, அரசியல் தலைவர்களின் பிள்ளைகளுக்கு, பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது மகள் திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார் என்பது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. நிர்மலா சீதாராமனின் கணவர் பொருளாதார நிபுணரும் சமூக விமர்சகருமான டாக்டர் பரகலா பிரபாகரும் அரசியல் வட்டாரத்தில் அதிகம் அறியப்பட்டவரே. பெற்றோர் இருவரும் அரசியல் பின்புலம் கொண்டிருந்தாலும், திருமணம் எளிமையாக நடந்திருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள் மற்றும் ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் ஆகியோர் மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். அரசியல் வாடையே இல்லாமல் எளிமையிலும் எளிமையாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. மத்திய நிதியமைச்சர் வீட்டு திருமணம் ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு மட்டும் இல்லாமல் அதிசயக்கும் வகையிலும் நடந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.