”இலவசம்” என்று அழைக்கப்படும் பொதுநல நடவடிக்கைகள், தமிழ்நாட்டை ஏழை மாநிலமாக மாற்றவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது.
மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன், உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், ”இந்த திட்டங்கள் வருமான இடைவெளியைக் குறைத்து, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பங்களித்த திட்டங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்போது வாதிட்ட வில்சன், மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில் மயமாக்கலின் அடிப்படையில் தமிழ்நாட்டை முதல் 3 மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்கு இந்த திட்டங்கள் முக்கிய பங்காற்றி உள்ளதாகவும், சிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழகத்தில் அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இத்தகைய செழுமையின் காரணமாகவே, பிற மாநிலங்களிலிருந்து இடம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கை 8.3% ஆக அதிகரித்துள்ளது. அதற்கு இலவச மருத்துவ வசதிகள் இணையற்றவை. மேலும், மனுதாரரின் வழக்கறிஞரான அஸ்வினி குமார் உபாத்யாயை, ‘சமூக நலத் திட்டங்கள் எவ்வாறு ஒட்டுமொத்த சமுதாயத்தை உயர்த்தி, மக்களின் மகிழ்ச்சிக்குப் பங்களிக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள சில ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ வேண்டும்’ எனக் கூறினார். ‘இலவசங்கள்’ என்பது எதிர்மறையான பொருளைக் கொண்ட கடுமையான பெயர் எனக் கூறிய அவர், பல நூற்றாண்டுகளாக உயர் சாதியினரின் சமூக மற்றும் பொருளாதார ஒடுக்குமுறையால் பின்தங்கிய நலிந்த பிரிவினரை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உயர்த்துவதற்கான நலத்திட்டங்களே இவை எனக் குறிப்பிட்டார்.
மேலும், பல நூறு ஆண்டுகளாக, சமூகத்தின் உயர்மட்டத்திலுள்ளவர்களுக்குக் கிடைத்த அதே வாய்ப்பு அவர்களின் குடும்பங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இது இலவசம் அல்ல, சமூக, பொருளாதார சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான கருவி எனத் தெரிவித்துள்ள அவர் தமிழக அரசு சமூக நீதி மற்றும் சமூக நல நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது என எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் உள்ள அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை எழுத்துப்பூர்வ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில், அரசுக்குச் சொந்தமான பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் குறைந்த வருமானத்தைக் கொண்ட வீடுகளில், 12% வரை பணம் சேமிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான வில்சன் வாதிட்டார்.