கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வருபவர் ரேணுகா. இவர், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியில் வசித்து வரும் ஜாவத் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஜாவத் மொபைல் பழுது பார்க்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். ரேணுகா தனியாக வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில், இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, பெங்களூருவில் உள்ள அக்ஷயா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் லிவ்-இன் உறவில் இருந்து வந்தனர்.
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்தது. ஜாவத் வேறொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இதனையறிந்த ரேணுகா அவரிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். ஜாவத்தின் பெண் தோழியால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ரேணுகா, அருகில் இருந்த கத்தியை எடுத்து ஜாவத்தின் நெஞ்சு பகுதியில் சராமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் ஜாவத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தவறை உணர்ந்த ரேணுகா, தனது காதலன் ஜாவத்தின் உடலை தன்னுடைய மடியில் வைத்து கதறி கதறி அழுதுள்ளார். அவரது கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த போலீசார், குற்றவாளி ரேணுகாவை கத்தியோடு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.