தூக்கு தண்டனை கொடூரமானதா என்பது குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மரண தண்டனையை தூக்கு தண்டனையாக நிறைவேற்றாமல் வேறு வழிகளில் நிறைவேற்றலாம் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, சட்ட ஆணையத்தின் அறிக்கை ஒன்றை படித்துக் காட்டினார். அதில், இந்தியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை மிகவும் கொடூரமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக ரிஷி மல்ஹோத்ரா தெரிவித்தார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி கூறுகையில், நாட்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை என்பது தூக்கு தண்டனையாகும். இது மிகவும் கொடூரமானதா என்பது தொடர்பாக விவாதம் நடத்த மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும். மேலும் மரண தண்டனையை, குறைந்த வலியுடன் நிறைவேற்றுவதற்கான மாற்று வழிகள் உள்ளனவா? என்பது குறித்தும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக விவாதம் நடத்தி, தகவல்களை சேகரிக்க வேண்டும். இந்த விவரங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் ஆவணமாக தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிடுகிறேன்.
மேலும், தூக்கு தண்டனையால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். மரண தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு வலியற்ற முறையில் மரணத்தை நிறைவேற்றக் கோரும் விஷயத்தில் உச்சநீதிமன்றம் திறந்த மனதுடன் உள்ளது. தூக்கு தண்டனைக்குப் பதிலாக துப்பாக்கியால் சுடுதல், மரண ஊசி அல்லது மின்சார நாற்காலி போன்றவை குறித்து பரிசீலிக்கலாம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உடனடியாக முடிவெடுக்க முடியாது. எனவே, இதுகுறித்து நாங்கள் பரிசீலிக்கிறோம். இந்த விஷயத்தில் நமக்கு போதுமான அறிவியல் தரவுகள் தேவை. இதுதொடர்பாக கமிட்டி அமைத்து விசாரிக்கலாம் என்று கூறி வழக்கை மே 2ஆம் தேதிக்கு தலைமை நீதிபதி ஒத்திவைத்தார்.