நாடு முழுவதும் சாலை விதிகளை பொதுமக்கள் பின்பற்றாமல் இருப்பதால், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நபர்கள் விபத்தில் உயிரிழக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் செல்வதால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிப்படி நடந்து கொள்ளாதவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்து தற்சமயம் கோயமுத்தூரிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் 2 பேருமே தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு நடுவே சாலை விதிகளை மீறி செல்பவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பது மட்டுமல்லாமல் முறையாக விதிகளை பின்பற்றுபவர்களுக்கு பரிசுகள் வழங்கும் சம்பவமும் நடந்தேறி வருகிறது.
அந்த வகையில், தஞ்சையில் இருசக்கர வாகன ஓட்டிகள் 100% தலைக்கவசம் அணிவதை உறுதி செய்யும் விதத்தில், அந்த மாவட்ட காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதற்காக போக்குவரத்து காவல்துறையினர் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வரும் பெண்களுக்கு விலை இல்லாத பெட்ரோல் 1 லிட்டர் பெட்ரோல், வெள்ளி நாணயம் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த விதத்தில், தஞ்சை அண்ணா சாலை வழியே தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகன ஓட்டி வந்த பெண்களை காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அந்த பெண்களுக்கு 1000 ரூபாய் மதிப்பிலான வண்ண புடவைகளை பரிசாக வழங்கி அவர்களுக்கு காவல்துறையினர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.