தமிழகம், புதுவை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இந்த டிசம்பரில் மழை எப்படி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஒவ்வொரு மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பையும் வெளியிடும். அதன் அடிப்படையில் டிசம்பர் மாதத்திற்கான வானிலை முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்த டிசம்பர் மாதத்தில் இயல்பை ஒட்டி மழை இருக்கும் என்றும் தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் 69% முதல் 113% வரை மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நீண்ட கால முன் கணிப்புகளின் அடிப்படையில் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு தொடங்கியது முதல் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பரவலாக மழை பொழிவைக் கொடுத்து வந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு விவசாயிகள்
மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவிலிருந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த மாதத்தில் தமிழகத்தில் இயல்பை ஒட்டி மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக 69 சதவீதம் முதல் 113 சதவீதம் வரை மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரைப் பிரதான மழைப்பொழிவு தமிழகத்திற்குக் கிடைக்கிறது. எனவே தாக்கம் இயல்பை ஒட்டி இருக்கும் என்கிற செய்தி மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக இருந்தாலும் அடுத்து உருவாக இருக்கும் காற்றழுத்த
தாழ்வுப் பகுதி அல்லது புயல் சின்னம் தமிழகத்திற்கு எந்த அளவிற்கு மழை அளவு அளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.