கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே வரும் மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், கர்நாடகாவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, உடுப்பிக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அப்போது, அந்த ஹெலிகாப்டரில் மூட்டைகளில் பணம் கொண்டு வரப்பட்டதாக கர்நாடகாவின், கப்பு தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குமார் சொர்கி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றார். அதன்பேரில், அண்ணாமலையின் அறை, வாகனங்கள், அவர் வந்த ஹெலிகாப்டர் என அனைத்தையும் தேர்தல் அதிகாரிகள் முழுமையாக சோதனை நடத்தினர். தீவிர சோதனைக்கு பின் பேசிய தேர்தல் அதிகாரி சீதா, விதிகளை மீறும் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என கூறினார். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.