இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீராங்கனைகளான சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட பலரும் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலீசார் 2 எப்ஐஆர் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் டெல்லி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் கடந்த ஜூலையில் பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்தவர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மிரட்டக் கூடாது என மாஜிஸ்திரேட் தெரிவித்தார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. ‘பாலியல் நோக்கமின்றி பெண்ணை கட்டி அணைப்பது குற்றமல்ல. மல்யுத்தத்தில் ஆண் பயிற்சியாளர்கள் அதிகம். வீராங்கனைகளுக்கு பயிற்சி கொடுப்பதும் அவர்கள் தான்.
அதனால் ஆண் பயிற்சியாளர்கள் பயிற்சியின்போது வீராங்கனைகளை தழுவி பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கும். இது இந்த விளையாட்டில் இயல்பானது. 2017 மற்றும் 2018ஆம் ஆண்டில் நடந்தது என சொல்லி தற்போது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு தான் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது கர்நாடகத்தின் பெல்லாரி மற்றும் லக்னோவில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதனால் இந்த வழக்கை டெல்லியில் விசாரிக்கக் கூடாது’ என் பிரிஜ் பூஷன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் மோகன் தெரிவித்துள்ளார்.