தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் அய்யம்மாள் (45) – அக்பர் இப்ராஹிம் தம்பதியர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த அய்யம்மாள், அண்ணா நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து இவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது அவர் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்த அவரது கணவர் அக்பர் இப்ராஹிம், மனைவி அய்யாம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அக்பர், தான் மறைத்து வைத்திருந்த கத்தி போன்ற ஆயுதத்தைக் கொண்டு அய்யம்மாளை குத்திக் கொலை செய்துவிட்டு, பின் அவர் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார்.
அரசு மருத்துவமனை அருகிலேயே நடந்த இந்த சம்பவத்தை அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை தொடங்கினர். எரிந்த நிலையில், காயங்களுடன் கிடந்த அய்யம்மாள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணவன்-மனைவி இருவருக்கும் இடையே கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்ததும், அதில்தான் கணவர் அக்பர் இப்ராஹிம் இப்படியொரு கொடூரத்தை செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் மனைவியை கொலை செய்த அக்பர் இப்ராஹிம், சொந்த ஊரான கோவில்பட்டிக்கு சென்று அங்குள்ள கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். கணவன்-மனைவிக்கு இடையேயான தகராறு காரணமாகத்தான், அய்யம்மாள் கோவில்பட்டியில் இருந்து மாற்றல் வாங்கி திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். நடுரோட்டில் அரசு ஊழியருக்கு நடந்த இந்த கொடூரச்சம்பவம், அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.