பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சிக்ஹார் வீர் சிங்-நிதி சிங் தம்பதி தான் தற்போது, சமோசா விற்பனையில் கொடிகட்டி பறந்து நாடு முழுவதும் பிரபலமான தொழிலதிபர்களாக மாறியுள்ளனர்.
சிக்ஹார் வீர் சிங், நிதி சிங் இருவரும் ஹரியானாவில் ஒன்றாக கல்லூரி படிப்பை முடித்தனர். அங்கு நண்பர்களாக இருந்த இருவரும், பின்னர் காதலர்களாக மாறியுள்ளனர். படிப்பு முடிந்த பிறகு சிக்ஹார் வீர் சிங் பெங்களூருவில் உள்ள பயோகான் நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக பணிபுரிந்தார். அதன்பிறகு காதலி நிதி சிங்கை திருமணம் செய்து கொண்டு பெங்களூரு அழைத்து வந்தார். இதனால் நிதி சிங் பஞ்சாப்பில் மாதம் ரூ.2.5 லட்சம் ஊதியமாக பெற்றுக் கொண்டிருந்த தனியார் மருந்து நிறுவன வேலையை கைவிட்டார். பெங்களூருவில் வசித்து வந்த இருவரும், இனி வெளியே வேலை பார்ப்பதை விட்டு விட்டு தொழில் தொடங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி சமோசா கடை திறக்க திட்டமிட்டனர்.
இதற்காக தங்களது வீட்டை ரூ.80 லட்சத்துக்கு விற்பனை செய்து அந்த தொகையை முதலீடாகக் கொண்டு கடந்த 2016ஆம் ஆண்டு பெங்களூருவில் ஐடி நிறுவனங்கள் நிறைந்த எலக்ட்ரானிக் சிட்டியில் ‘சமோசா சிங்’ என்ற பெயரில் கடையை திறந்தனர். அதன் பின்னர் சில நாட்களிலேயே விற்பனை அதிகரித்ததால், அவர்கள் எதிர்பார்த்ததை விட நல்ல வருமானம் கிடைத்தது. அதனால் அடுத்த 6 மாதங்களில் ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, சர்ஜாபூர், இந்திரா நகர், எம்.ஜி. சாலை உள்ளிட்ட 12 இடங்களில் கிளைகளை திறந்தனர்.
வெஜ் சமோசா, கடாய் பனீர் சமோசா, பட்டர் சிக்கன் சமோசா என வகை வகையாக சமோசா விற்று விற்பனையை பெருக்கினர். இவர்களின் உழைப்புக்கு பலனாக தற்போது 9 நகரங்களில் 60-க்கும் மேற்பட்ட சமோசா கடைகளாக விரிவடைந்தது. இந்த கடைகளில் ஒவ்வொரு மாதமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமோசாக்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகின்றனர். இதன் மூலம் சிக்ஹார் வீர் சிங், நிதி சிங் தம்பதி ஆண்டுக்கு ரூ.45 கோடி வருமானம் வருகிறது. அதாவது ஒரு நாளைக்கு சமோசா விற்பனை மூலம் ரூ.12 லட்சம் சம்பாதிக்கிறார்கள் என தெரிகிறது.