கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் சதிக்கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் நடந்த வன்முறை தொடர்பாக செய்தி வெளியிட்ட ஆங்கில ஊடகம் ஒன்று, போராட்டத்தின் பின்னணியில் ஆதிதிராவிடர்கள் உள்ளதாக உளவுத்துறை கூறியதாக தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத்துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள திருமாவளவன், ‘அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் மாணவியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது’ என தெரிவித்துள்ளார்.