சென்னையில், தனியார் பள்ளி ஒன்றுக்கு நேற்று காலை 10.30 மணியளவில் வந்த இ-மெயிலில், ‘பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடித்து சிதறும். முடிந்தால் தடுத்து உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகத்தினர், உடனடியாக இதுகுறித்து மாநகர காவல் ஆணையருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து மிரட்டல் விடுத்த நபரின் இ-மெயில் முகவரியை அடிப்படையாக வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதற்கிடையே, மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளி வளாகம், வகுப்பறை, மாணவரின் புத்தகப் பைகள் என அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடனும் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், அடுத்தடுத்து மேலும் சில தனியார் பள்ளிகளில் இருந்தும், தங்கள் பள்ளிக்கும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அனைத்து இடங்களுக்கும் போலீசார் விரைந்தனர்.
மேலும், பள்ளிக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. மேலும், பயப்பட வேண்டாம். உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள் என்று குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பான செய்தி, பிற பள்ளிகளுக்கும் பரவியது. இதனால் மிரட்டல் விடுக்கப்படாத பல பள்ளிகளும், தங்கள் பள்ளிக்கு அரைநாள் விடுமுறை அளித்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் இ-மெயில் வாயிலாக விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு உள்ளான கல்வி நிறுவனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வெடிபொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, மிரட்டல் என்பது புரளி. மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றவாளியை விரைவில் கைது செய்வோம்” என்று தெரிவித்தார். இந்நிலையில், அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.