இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் காரணமாக ஆசியா சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கொரோனா காலத்தில் உலகப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டது. இதில் இந்தியாவும் உள்ளடங்கும். கொரோனாவுக்கு பின் உலக பொருளாதார நிலை சற்று தலை தூக்கிய நிலையில், உக்ரைன் – ரஷ்யா போர் தொடங்கியது. இது உலக பொருளாதாரத்தை கடுமையாக தாக்கியது. கடந்த 600 நாட்களாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் நீடித்தும் வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது திடீரென பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஜிஹாதிகள் பெரும் யுத்தத்தை நடத்தி வருகின்றனர். இஸ்ரேலும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இஸ்ரேல் மிகப் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள காஸா, மேற்கு கரையும் பேரழிவை எதிர்கொண்டுள்ளது.
இதனால் இஸ்ரேலுடன் வர்த்தகத்தை பெருமளவில் மேற்கொண்டு வரும் இந்தியா கடுமையான நெருக்கடியை சந்திக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிடம் இருந்து பாதுகாப்பு தளவாடங்கள், பட்டை தீட்டப்படாத வைரங்கள் என பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தக உறவு நடைபெற்று வருகிறது. தற்போதைய யுத்தத்தின் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 4 டாலர்கள் அதிகரித்துள்ளது. ஆசியா சந்தையில் தற்போது 1 பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 88.76 டாலராக அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.