தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளநிலையில், இதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், தேர்தல் பணியின் போது குழந்தைகளை எந்த வகையிலும் ஈடுபடுத்துவதை கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை கையில் ஏந்திக்கொண்டு செல்வது, வாகனங்களில் குழந்தைகளை ஏற்றி செல்வது, பேரணிகள் போன்ற எந்த வகையிலும் குழந்தைகளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், எந்தவொரு தேர்தல் பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஒரு அரசியல் தலைவரின் அருகில் ஒரு குழந்தை அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருப்பது விதிகளை மீறுவதாக கருதப்படாது என்று தொடர்புடைய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் அரசியல் கட்சிகளின் முக்கியப் பங்கு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வலியுறுத்தி வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு ஜனநாயகத்தின் அம்சங்களை நிலைநிறுத்துவதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.