திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்த காதலியை, கொலை செய்து வீட்டிலேயே புதைத்துவிட்டு குடும்பத்துடன் தப்பிச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் குஷ்பு. இளம் பெண்ணான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். அப்போது, அவரது தந்தை பிக்ராம் சிங் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது குஷ்பு, கௌரவ் என்ற இளைஞரைக் காதலித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, கௌரவ் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் அதிகரித்து அவரை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதையடுத்து, கடந்த சனிக்கிழமையன்று கௌரவை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று குஷ்பு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கௌரவிடம் வலியுறுத்தியுள்ளார். கௌரவ் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், அவரை குஷ்பு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால், அவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் கௌரவ். பின்னர் குஷ்புவின் உடலைத் தனது வீட்டிலேயே புதைத்துவிட்டு, குடும்பத்துடன் தப்பி ஓடியது விசாரணையில் அம்பலமானது.

இதையடுத்து, கௌரவ் வீட்டில் புதைக்கப்பட்ட இடத்தை போலீசார் தோண்டியபோது, கொலை செய்யப்பட்ட குஷ்புவை எலும்புக்கூடாக வெளியே எடுத்தனர். மேலும், குஷ்புவின் உடைமைகளையும் போலீசார் மீட்டுள்ளனர். பின்னர் கௌரவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.