மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடந்தது. நவம்பர் 23-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியை பதிவு செய்தது. பாஜக மட்டுமே 132 தொகுதிகளை கைப்பற்றி வியப்பை ஏற்படுத்தியது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.
காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதியில் உத்தவ் தாக்கரே சிவசேனா 20, காங்கிரஸ் 16, என்சிபி 10 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் முதல்வர் யார் என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகிறது. குறிப்பாக, யார் முதல்வர் என்பதில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சிவசேனா ஆதரவாளர்கள் மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வர் பதவி வகிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதுபோல் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், தேவேந்திர பட்னாவிஸே முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதனால், அங்கு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இந்த பரபரப்பான சூழலில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் இருவரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேற்று மாலை 4 மணிக்கு டெல்லிக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வரை தீர்மானிப்பது குறித்து டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இல்லத்தில் மகாயுத்தி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகிய மூவரும் கலந்து கொண்டனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த ஆலோசனையில் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர், யார் யாருக்கு துணை முதல்வர் பொறுப்பு, எந்தெந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் எத்தனை இடங்கள், அவர்களுக்கு என்னென்ன இலாகா என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையின் முடிவில் தேவேந்திர ஃபட்னவிசை முதல்வராக்குவது என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.