’மாண்டஸ்’ புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
’மாண்டஸ்’ புயல் தாக்கம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இன்று பிற்பகல் இருந்து இரவு வரையில் 27 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் அனைத்தும் ஏ.டி.ஆர் 72 சீட்டுகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் ஆகும். இந்த விமானங்கள் பறக்கும் போது புயல் காற்று அடித்தால் விமானத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும். எனவே, ஏ.டி.ஆர். ரக விமானங்களின் சேவைகளை மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வரை நிறுத்தி வைக்கும்படி விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை சென்னை விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தது.

இதையடுத்து, ஒட்டுமொத்தமாக ஏ.டி.ஆர். ரக விமானங்களை புயல் தாக்கம் ஓயும் வரையில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்கள் தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூர், திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் அனைத்தும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சில விமானங்களும் ரத்து ஆகலாம் என கூறப்படுகிறது.