தெலங்கானா மாநிலம் மஞ்ச்ரியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலூரி அஞ்சலி (21). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருடன் பணிபுரிபவர் பரமேஸ்வரி. பரமேஸ்வரிக்கு மகேஸ்வரி என்ற திருநங்கை சகோதரி உள்ளார். அவர், பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வருகிறார். இளம்பெண் அஞ்சலிக்கு பரமேஸ்வரி மூலம் திருநங்கை மகேஸ்வரி அறிமுகமாகியுள்ளார். இவர்கள் மூவரும் ஒரு பகுதியில் பணிபுரிந்த நிலையில், ஒரே இடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், திருநங்கை மகேஸ்வரிக்கு அஞ்சலி மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென அஞ்சலியை மகேஸ்வரி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தனக்கு விருப்பமில்லை எனக் கூறி அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை அன்று இது தொடர்பாக அஞ்சலி மற்றும் மகேஸ்வரிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மகேஸ்வரி அஞ்சலியை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து காயங்களுடன் அஞ்சலி நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர்களுடன் அருகே வசிக்கும் விக்னேஷ் என்ற நபர் அஞ்சலியின் குடும்பத்தினருக்கு போன் செய்து மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கூறியுள்ளனர். இதையடுத்து, அஞ்சலியின் குடும்பத்தினர், மருத்துவமனைக்கு வந்துள்ளனர். ஆனால், அஞ்சலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மகேஸ்வரிக்கும் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், திருநங்கை மகேஸ்வரி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த கொலை சம்பவத்தில் உடன் அருகே வசிக்கும் அஸ்மீர் ஸ்ரீநிவாஸ் என்ற நபர் மீதும் சந்தேகம் இருப்பதாக அஞ்சலியின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.