ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், அதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் இருந்து வருகிறது.
இரு நாடுகளும் தங்கள் பாதுகாப்பு துறைகளை பலப்படுத்தும் பணிகளில் தீவிரமாக உள்ளன. எல்லை பகுதி மட்டுமல்லாமல் வான்வழி மற்றும் கடற்படைகளிலும் பயிற்சி மற்றும் ஆயுத சோதனைகள் நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தானின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா தனது கடற்படைக்கு புதிய ஆயுதங்களை சேர்க்கும் நடவடிக்கையில், DRDO (பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) மற்றும் இந்திய கடற்படை இணைந்து உருவாக்கிய எம்.ஐ.ஜி.எம் என்ற அதிநவீன வெடிகுண்டு ஆயுதம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
விசாகப்பட்டினம் கடற்படைக் கட்டிடத்தில், சமீபத்தில் நடைபெற்ற சோதனையில், குறைந்த அளவிலான வெடிபொருள் கொண்டு கடலுக்குள் வெடிக்கும் வகையில் இந்த ஆயுதம் பரிசோதிக்கப்பட்டது. இது ஒரு வகையான கண்ணிவெடி ஆயுதம் போல செயல்படும். அதாவது, எதிரியின் போர் கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது.
DRDO தலைவர் டாக்டர் சமீர் வி. காமத், இந்த சோதனை வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளார். “இந்திய கடற்படையின் தாக்கு திறனில் இது ஒரு முக்கிய அத்தியாயமாக இருக்கும். எம்.ஐ.ஜி.எம் விரைவில் சேவையில் இணைக்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார். இந்த வெற்றிகரமான சோதனை இந்திய கடற்படைக்கு கீழ்கடல் பாதுகாப்பில் ஒரு புதிய முனையம் ஏற்படுத்தும் என பாதுகாப்பு வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளன.