நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் 2022 தேர்வு, ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்பட்டது.. கடந்த ஆண்டை போலவே ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது..
இந்நிலையில், நீட் இளநிலை தேர்வை ஒத்திவைக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.. அப்போது, வட மாநிலங்களின் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு உள்ளதால் குறித்த நேரத்தில் தேர்வுக்கு செல்வது கடினம் என்று மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.. அப்போது நீதிபதிகள், சில மாணவர்கள் தேர்வுக்கு செல்ல முடியவில்லை என்பதால் ஒட்டுமொத்த நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.. மேலும் இனி இத்தகைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்..
இதனிடையே நீட் தேர்வை ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.. எனவே நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தாக்கல் செய்த மனுவை 17-ம் தேதிக்கு முன்னதாக பட்டியலிடுவதாக தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.. எனவே உச்சநீதிமன்றத்தில் நாளை இந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..