தமிழக காவல்துறையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு ரூ.300 சிறப்பு படி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை அவரவர் காவல் எல்லையில் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர சிறப்பு பாதுகாப்பு பணி, நுண்ணறிவு பணி, குற்றப்பிரிவு, புலன் விசாரணை, காவல் கட்டுப்பாட்டு பணி மற்றும் தொழில்நுட்ப பணிகளை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். டிஜிபி பரிந்துரைப்படி சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு பணி என பல்வேறு நிலைகளில் இரவு பணி மேற்கொள்ளும் 2ஆம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையில் அதிகாரிகள் மாதத்திற்கு 6 முதல் 10 நாட்கள் இரவு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்களுடன் ஆயுதப்படை, சிறப்பு காவல்படையினரும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு பணிக்குக் செல்லும் பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக இரவு ரோந்து பணிக்கு செல்லும் அனைத்து இரண்டாம் நிலை காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரையிலான அதிகாரிகளுக்கு சிறப்பு படியாக மாதம் ரூ.300 வழங்கப்படும். இதற்காக தமிழக அரசு, ஆண்டுக்கு 42 கோடியே 22 ஆயிரத்து 800 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தமிழக உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.