நாடு முழுவதும் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் மீது என்ஐஏ நடத்திய சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், சில முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர். இதனைக் கண்டித்து கேரளாவில் எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் அரசுப் பேருந்துகள், தனியார் வாகனங்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகிறது.

அதேபோல், நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு, சுல்தான் புத்தேரி, கள்ளிக்கோட்டை, நிலம்பூர், கல்பெட்டா மற்றும் பாலக்காடு உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் செல்லும் தமிழக அரசின் 11 அரசுப் பேருந்துகள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் கேரளாவுக்கு செல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை வழக்கம் போல் தமிழக அரசு பேருந்துகள் கேரளாவுக்கு இயங்கும் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.