பல சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் இடையே சென்னை வானகரத்தில் நேற்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்திருந்தார்..
இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும், அது தொடர்பான தகவல்களை தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது.. மேலும் கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களும் தாக்கல் செய்யப்பட்டன.. 97%-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..
இதனிடையே ஓபிஎஸ் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது.. அந்த புகாரில் ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளதாகவும், கட்சியின் உட்பிரிவுக்கு எதிராக திருத்தங்கள் கொண்டுவந்து தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கொடுக்கக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது.. மேலும் ஓ. பன்னீர்செல்வம் அளித்த புகாரும் பரிசீலனையில் உள்ளதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் தரப்பு ஆவணங்களை பரிசீலித்த பிறகு, இரு தரப்புக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது..