யோயோ ஆப் மூலம் பெண்களிடம் பழகி அந்தரங்க புகைப்படங்களை பெற்று மிரட்டி பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினரிடம், கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் தன்னுடன் பழகிய நபர், தனது அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் எனக் கூறி பணம் பெற்றதாக” தெரிவித்தார். எனவே, அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். இந்த புகாரின் அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், தொழில்நுட்ப உதவியுடன் கண்காணித்து விருதுநகரை சேர்ந்த பரமசிவம் என்ற என்ற நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், பரமசிவம் யோயோ என்ற ஆன்லைன் இணையதள ஆப் மூலம் அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக ப்ரொபைல் போட்டோவாக வைத்து பெண்களிடம் நண்பராக பழகி உரையாடி வந்தது தெரியவந்தது. மேலும், பெண்களிடம் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்றுக் கொண்டு, அதை வைத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார்.
இதேபோல பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்து இருப்பதும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலமும் பெண்களிடம் மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பரமசிவம் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.