இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசனையை வெளியிட்டது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதற்கிடையே, இன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த சூழலில் தான், பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசனையை வெளியிட்டது. வெளியுறவுத்துறையின் ஆலோசனைக் குறிப்பில், “இந்தியா பாகிஸ்தானுக்குள் நடத்திய இராணுவத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம்” என வலியுறுத்தியது. மேலும், வான்வெளி மூடல் குறித்தும், பாகிஸ்தானுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், எதிர்பாராத விதமாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் அடையாள அட்டைகளை எடுத்துச் செல்லவும், அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு எச்சரித்தது இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதலுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்யுமாறு வெளியுறவுத்துறை அமெரிக்கர்களை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.