இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம், சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடைபெறும் தேதி இன்று அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது, ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த இரு முக்கிய கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது நடிகர் மன்சூர் அலிகானின் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தியது. இது குறித்து இரண்டு நாட்கள் முன்பு பேசிய அக்கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான், பேச்சுவார்த்தையின் உடன்பாடு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேசிய பொதுச்செயலாளர் கண்ணதாசன்; இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம். தலைவருக்கு இருந்த அதிகாரங்கள் அனைத்தும் பொதுச்செயலாளர் கண்ணதாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இனி மன்சூர் அலிகான் உறுப்பினராக மட்டுமே இருக்க முடியும். தன்னிச்சையாக செயல்பட்டதாலும், நிர்வாகிகள் இடையே எந்தவித ஆலோசனையையும் மேற்கொள்ளாததாலும் செயற்குழுவைக் கூட்டி இவ்வாறு செய்ததாக பொதுச்செயலாளர் கண்ணதாசன் தெரிவித்துள்ளார்.