தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மத்திய மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் உரிமைத் தொகை கோர முடியாது. ரூ.50 லட்சத்திற்கும் அதிகமாக ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு இதே நிலைமைதான்.
இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கடந்த ஜூலை மாதம் இதற்கான முகாம் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 4ஆம் தேதி முதற்கட்ட முகாம் நிறைவடைந்தது. 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் அதன் மூலம் பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, ஆகஸ்ட் 5ஆம் தேதி இரண்டாம் கட்ட முகாம் தொடங்கப்பட்டது. 18ஆம் தேதி வரை நடைபெற்ற முகாம்களில் விண்ணப்பிக்காதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலமாக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், விருத்தாசலத்தின் ஆய்வுப் பணியில் இருந்த தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவி கணேசனிடம் பெண்கள், ரூ.1000 உரிமைத் தொகை எங்களுக்கு எல்லாம் கிடைக்குமா என கவலையோடு கேட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர், வதந்திகளை நம்ப வேண்டாம். நீங்கள் கவலைப்படவும் வேண்டாம். அரசு ஊழியர்கள், பணக்காரர்களுக்குதான் கிடைக்காது. உங்களை போன்ற அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கண்டிப்பாக கிடைக்கும்” என்றார். இதனால் அப்பெண்கள் மகிழ்ச்சியோடு சென்றனர்.